சென்னை: நாளை முதல் பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மீண்டும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து திட்டமிட்டப்படி நாளை திங்கள்கிழமை 15 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் எனவும் பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளன.
இதையடுத்து நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டிய வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றே துவங்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள், 56 புற நகர் பேருந்துகள் இயக்கப்படாமல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே வேலை நிறுத்தத்தை போக்குவரத்து ஊழியர்கள் துவங்கியுள்ளதால், கிராமங்களுக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆர்பாட்டத்தில் ஈடுபடவும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.