திருநங்கை தேர்ச்சி என டிவியில் என் பெயர் வந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்: மாணவி சங்கீதா

தருமபுரியைச் சேர்ந்த திருநங்கை 10ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியைப் பார்த்து மாணவி சங்கீதா அதிர்ந்து போனாள்.
திருநங்கை தேர்ச்சி என டிவியில் என் பெயர் வந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்: மாணவி சங்கீதா
Updated on
1 min read


தருமபுரி: தருமபுரியைச் சேர்ந்த திருநங்கை 10ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியைப் பார்த்து மாணவி சங்கீதா அதிர்ந்து போனாள்.

தன் பெயர் திருநங்கை என்று செய்திகளில் வெளி வந்ததைப் பார்த்ததும் யார்தான் அதிர மாட்டார்கள்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 450 மதிப்பெண்கள் பெற்ற தருமபுரியைச் சேர்ந்த சங்கீதா, திருநங்கை என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநரகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தான் இதற்குக் காரணம்.

பென்னாகரம் அருகே நிர்குந்தி என்ற இடத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் படித்தவர் பி. சங்கீதா. இவர் தமிழில் 95, ஆங்கிலத்தில் 86, கணிதத்தில் 78, அறிவியலில் 93, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களுடன் மொத்தமாக 450 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

வெற்றி பெற்றதைக் கொண்டாட வேண்டிய நேரத்தில், செய்தி சேனல்களில் சங்கீதா என்ற திருநங்கை தேர்ச்சி என்று தன் பெயர் செய்திகளில் வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார் மாணவி. 

"இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. சென்னையில் இருந்து ஒரு செய்தியாளர் எங்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் இதுபோன்ற விஷயமே தெரிய வந்தது. அவரிடம், சங்கீதா எங்கள் மகள்தான். திருநங்கை அல்ல, வேறு எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று எடுத்துச் சொன்னோம். என் மகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவரது தோழிகள் இது பற்றி சொல்லி அவளை கிண்டல் செய்வார்களோ என்று அழுது கொண்டே இருக்கிறாள்" என்றார் அவரது தந்தை பழனியப்பன் (40).

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் வி. அன்பழகன் கூறுகையில், இந்த தவறு கடந்த ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டு, ஊழியரிடம் அதனை கணினியில் திருத்துமாறு கூறியிருந்தேன். ஆனால் அவர் திருத்தவில்லை. அதனால்தான் இந்த தவறு நிகழ்ந்திருக்கிறது என்று பதிலளித்தார்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, அதனை சரிபார்க்காமலேயே மாணவி கையெழுத்திட்டுள்ளார். அதுவும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்களும் கவனிக்கவில்லை. அதனால்தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்று தருமபுரி கல்வித் துறை அதிகாரி ராமசாமி கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், சங்கீதாவின் மதிப்பெண் சான்றிதழில் பெண் என்றே குறிப்பிடப்பட்டிருப்தாகவும் அதிகாரி ராமசாமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com