புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகளில் (M.D., M.S.) 105 இடங்களை நிரப்புவதற்கான நுழைவு தேர்வு 8 நகரங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 9,564 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்.டி., எம்.எஸ். பிரிவுகளில் 105 இடங்களும், டி.எம்., எம்.சி.எச். (DM, M.C.H) பிரிவில் 19 இடங்களும், சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சி பிரிவில் 25 இடங்களும் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான நுழைவு தேர்வு இன்று (மே 21) நடைபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, எம்.டி., எம்.எஸ். தேர்வுக்கு 12,852 பேரும், டி.எம்., எம்.சி.எச். போன்ற தேர்வுகளுக்கு 1,494 பேரும், சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சி பிரிவு (பிடிஎப்) தேர்வுக்கு 413 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
எம்.டி., எம்.எஸ். படிப்புக்கான நுழைவு தேர்வு காலை முதல் மதிம் வரை நடைபெற்றது. மொத்தம் 8 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 29 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து 9,564 கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இது 74.41 சதவீதமாகும்.
இத்தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் வெளியாகும். தொடர்ந்து எம்டி, எம்ஸ் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 14-ம் தேதியும், டிஎம், எம்.சி.-எச், சிறப்பு உயர்நிலை ஆராய்ச்சி படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 9-ம் தேதியும் நடைபெறுகிறது.