புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பிரச்னைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க, அம்மாநில காவல்துறை டிஜிபி வரும் 7-ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் வினோத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2015-இல் நடந்த வன்முறையில் பல்கலைக்கழகத்தின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. பல்கலைக் கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டன. இப்போராட்டம் கல்லூரியின் அமைதியான சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும். எனவே பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான சூழல் அமைய உத்தரவிட வேண்டும் கோரியிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை, நீதிபதி கிருபாகரன் முன் வியாழக்கிழமை வந்தது. காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கடந்த 2015-இல் யாராவது கைது செய்யப்பட்டனரா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறையினர் பதிலளிக்கவும் இந்த வழக்குத் தொடர்பாக புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி. வரும் 7-ஆம் தேதி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.