பொறையாறு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் இறந்த போக்குவரத்து ஊழியர்கள் 8 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 7.5 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில், ஊழியர்கள் ஓய்வுப் பிரிவு கட்டடம் கடந்த அக். 20-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பொறையாறில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்கள் எம். அன்பரசன், பி. மணிவண்ணன், ஜெ. பிரபாகரன், ஜெ. பாலு, ஆர். சந்திரசேகரன், எஸ். முனியப்பன், டி. தனபால், ஜி. ராமலிங்கம் ஆகியோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 7. 5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், பலத்த காயமடைந்த பேருந்து நடத்துநர் எஸ். வெங்கடேசனுக்கு ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையையும், காயமடைந்த நடத்துநர்கள் ஜெ. செந்தில்குமார், ஜி. பிரேம்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி, வி. ராதாகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.