

ஆளுநர் பன்வாரிலால் எந்த அரசியல் விதிமுறையையும் மீறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
தமிழகத்தைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் திடீர் ஆய்வை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மாளிகையைவிட்டு ஆளுநர் வெளியே வரக்கூடாதா?. ஆளுநர் பன்வாரிலால் எந்த அரசியல் விதிமுறையையும் மீறவில்லை. தமிழக அரசின் பணத்தை ஆளுநர் விரயம் செய்யவில்லை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. ஆளுநர் ரெய்டு ஒன்றும் செய்யவில்லை.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது. இந்திய கடலோர காவல் படையினர்தான் தாக்குதல் நடத்தினர் என்பது உறுதியாகவில்லை. புகாரின் பேரில் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என்றார்.
அதேசமயம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் ஆய்வு நடத்தாதது ஏன்? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.