

பேரறிவாளனை விடுவிப்பதில் இனியும் என்ன தயக்கம்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தும் அவரை அந்த வழக்கில் சிக்க வைத்ததாக அவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இவ்வழக்கில் எந்தக்குற்றமும் செய்யாத பேரறிவாளனை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதி வலை தாமதமானாலும் அறுத்தெறியப்பட்டிருக்கிறது.
இந்திய காவல் பணி அதிகாரியான தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்த விளக்க மனுவில், இராஜிவ் கொலை விசாரணையின் போது பேரறிவாளன் எவ்வாறு சிக்க வைக்கப் பட்டார் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘ பேரறிவாளன் என்னிடம் வாக்குமூலம் அளிக்கும்போது சிவராசன் கூறியவாறு இரு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கித் தந்ததாகக் கூறினார். அந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படப்போகின்றன என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் பேரறிவாளன் கூறினார். உண்மையில் அதுகுறித்து பேரறிவாளனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், அதை பதிவு செய்தால் அது பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு வகை செய்யும் வாக்குமூலமாக மாறி விடும் என்பதாலும், வாக்குமூலம் பெறப்பட்டதன் நோக்கத்தையே அது சிதைத்து விடும் என்பதாலும் பேரறிவாளன் கூறிய சில விஷயங்களை பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விவரங்களை சில ஆண்டுகளுக்கு முன்பே ஊடகங்களிடம் தியாகராஜன் தெரிவித்து விட்டார் என்றாலும் கூட இப்போது உச்ச நீதிமன்றத்தில் இவற்றை மனுவாக தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாற்று ஆகும்.
தடா சட்டப்படி இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால் விசாரணை அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்திற்கு இணையானதாக கருதப்படும் என்பதாலும், பேரறிவாளன் தான் வெடிகுண்டை தயாரிக்க உதவினார் என்று நம்பும் வகையில் தியாகராஜன் வாக்குமூலம் தயாரித்திருந்ததாலும் அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அந்த வாக்குமூலமே தவறானது என்பதை அதை பதிவு செய்த அதிகாரியே ஒப்புக்கொண்டிருப்பதால் பேரறிவாளன் மீதான அனைத்துக் குற்றச்சாற்றுகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இனி அவரை விடுதலை செய்வதைத் தவிர நீதிமன்றத்திற்கு வேறுவழியில்லை.
தாம் வாங்கித் தந்த பேட்டரி எதற்காக பயன்படுத்தப்படப் போகிறது என்பது தமக்குத் தெரியாது என்பதை நீதிமன்ற விசாரணையின் போது பலமுறை பேரறிவாளன் கூறியிருக்கிறார். ஆனால், வாக்குமூலம் அவருக்கு எதிராக இருந்ததால் அவரது வாதம் ஏற்கப்படவில்லை. இப்போது விசாரணை அதிகாரியே பேரறிவாளன் குற்றமற்றவர் என்று கூறிவிட்டதால் இனியும் அவரை அடைத்து வைக்க முடியாது.
இவ்வழக்கில் பேரறிவாளனை சிக்க வைப்பதற்காக பெரும் சதி நடந்திருக்கிறது. இராஜிவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்று விசாரணை அதிகாரிக்கு தொடக்கத்திலேயே தெரிந்திருந்த போதிலும் அவரை விடுவிக்க அந்த அதிகாரி முயற்சி செய்யவில்லை. மாறாக அவரின் வாக்குமூலத்தை திரித்து எழுதி தூக்குத் தண்டனை வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். இராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த வெடிகுண்டை தயாரித்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு உண்மைகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பின் பல்முனை கண்காணிப்புக்குழு 19 ஆண்டுகளுக்கு பிறகும் விசாரணையை முடிக்கவில்லை. இவையெல்லாம் இயல்பாக நடக்கவில்லை. பேரறிவாளனின் வாக்குமூலத்தை திரித்து எழுதிய அதிகாரிக்கு மனசாட்சி உறுத்தி, அதன் காரணமாக தனது தவறை அவர் இப்போது ஒப்புக்கொண்டிருப்பதால் தான் அந்த சதிவலை அறுக்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பிறகும் பேரறிவாளனை சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்க முடியாது. எனவே, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முன்பாகவே தமிழக அமைச்சரவை கூடி, அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி பேரறிவாளனை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி விடுதலையை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.