ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ. 7 கோடி செம்மரக் கட்டைகள் சிக்கின: சென்னை கிடங்கில் ஆந்திர போலீஸார் அதிரடி சோதனை

சென்னை அருகே கிடங்கு ஒன்றில் ஆந்திர மாநில போலீஸார் வியாழக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 7 கோடி மதிப்புள்ள 14 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
திருப்பதி போலீஸாரால் கைது செய்யப்பட்ட செம்மரக்கிடங்கின் உரிமையாளர் ரஃபி, கண்ணன், கார்த்திக். (வலது) சென்னை அருகே கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளால் ஆன பொருள்கள்.
Updated On :16 நவம்பர் 2017, 8:47 pm

DIN

சென்னை அருகே கிடங்கு ஒன்றில் ஆந்திர மாநில போலீஸார் வியாழக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 7 கோடி மதிப்புள்ள 14 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மொகந்தி கூறியதாவது: கடந்த 2 நாள்களுக்கு முன் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஏர்பேடு அருகில் அப்பகுதி போலீஸார் 10 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 21 செம்மரக்கட்டைகள், ஒரு காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருப்பதி போலீஸார் வியாழக்கிழமை காலை திருவள்ளூர் அருகில் முக்கிய செம்மரக் கடத்தல்காரரான அப்துல் ரசாக் (42) என்பவரைக் கைது செய்தனர். அப்துல் ரசாக் அளித்த தகவலின் பேரில், போலீஸார் சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் ரஃபி என்பவரால் நடத்தப்படும் செம்மரக் கிடங்கில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு செம்மரக் கட்டைகளுடன், செம்மரக் கட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாலைகள், மணிகள் மற்றும் பல்வேறு பொருள்கள் செய்யும் தொழிற்சாலையும் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கிடங்கிலிருந்த 14 டன் எடையுள்ள 595 செம்மரக் கட்டைகள், செம்மரக் கட்டைகளால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், கிடங்கின் உரிமையாளர் ரஃபி (48), அங்கு பணிபுரியும் கண்ணன்(46), கார்த்திக் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 7 கோடி என எஸ்.பி. தெரிவித்தார். 
மற்றொரு சம்பவம்: இதேபோல, கடப்பா சேஷாசல வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயன்றதாக தமிழகத் தொழிலாளிகள் 3 பேர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சேஷாசல வனப்பகுதியில் போலீஸாருக்கு முன்கூட்டியே கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சீனிவாசா பொறியியல் கல்லூரி அருகில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 23 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போலீஸார் லாரியில் இருந்த 6 பேரை கைது செய்து, அதில் இருந்த 23 செம்மரக் கட்டைகளுடன், லாரியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையைச் சேர்ந்த பிஜ்ஜி(27), சதீஷ் (27), ஆண்டி (29) மற்றும் கர்நாடக மாநிலம், சிக்மகலூரைச் சேர்ந்த ரவி (25), முருகேஷ் (29), குமார் (22) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் கடந்த 4 நாள்களுக்கு முன் சேஷாசல வனத்தில் முகாமிட்டு, கே.ஜி. பெண்டா பகுதியில் உள்ள சனீஸ்வரன் கோயில் அருகில் லாரியில் செம்மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றபோது பிடிபட்டது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.