அங்கீகரிக்கப்படாத மனை வரன்முறைத் திட்டம் ஓராண்டாக நீட்டிப்பு

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்துக்கான கால அளவு ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரைநடைமுறையில் இருக்கும்.
அங்கீகரிக்கப்படாத மனை வரன்முறைத் திட்டம் ஓராண்டாக நீட்டிப்பு
Updated on
1 min read

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்துக்கான கால அளவு ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரைநடைமுறையில் இருக்கும்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
குறைவான விலையில் மனைகளை வாங்க வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை பொது மக்கள் வாங்கியுள்ளனர். இந்த மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்தன. இத்திட்டத்தில் உள்ள அம்சங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப் பிரிவுகளை மூன்று வகைகளைப் பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதியின்றிப் பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் அப்படியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனை விற்கப்பட்டிருந்தால் அந்த மனைப் பிரிவும் வரன்முறை செய்யப்படும். மனைப் பிரிவில் அமைந்துள்ள சாலைகள் அப்படியே வரன்முறைப்படுத்தப்படும்.
திறந்த வெளி நில அளிப்பு: மனைப் பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப் பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பில் 10 சதவீத நிலத்தை மாநகராட்சி, நகராட்சிக்கு திறந்த வெளி இடமாக அளித்திட வேண்டும்.
தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும் போது, இந்த திறந்த வெளி இடம் அளிப்பு விதிகளில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
எந்த ஆண்டில் இருந்து....சென்னை பெருநகரம் மற்றும் பெருநகரப் பகுதியில் 1975-ஆம் ஆண்டு முதல் உள்ள மனைகளையும், நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் 1980 முதல் உள்ள மனைகளையும் வரன்முறைப்படுத்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னைப் பெருநகரப் பகுதியில் 1975-ஆம் ஆண்டு ஆக.5- ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு அக். 20-ஆம் தேதி வரையிலும், பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 1972 ஆம் ஆண்டு நவ. 29-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு அக்.20 வரையிலும், சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப் பகுதிகளில் 1980-ஆம் ஆண்டு ஜன. 1 முதல் கடந்த ஆண்டு அக். 20 வரையிலும் ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகள் அல்லது மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம்.
மேற்கண்ட தேதிகளுக்கு முன்பாக வாங்கப்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகவே கருதப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com