

மணிமுக்தா, ஆழியாறு அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களின் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்காக வரும் 22 -ஆம் தேதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5,493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதேபோன்று, கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களின் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது கோரிக்கையை ஏற்று, நான்கு கால்வாய்களின் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு வரும் 25 -ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், கோவை மாவட்டத்திலுள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.