சென்னை: அனைத்துப் பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும், நடப்பாண்டு முதல் மாணவர் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலையில் நடைபெறும் ஆசிரியர்கள் பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, எனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான முழு நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களின் மனதில் அமைதியைக் கொடுப்பது கல்விதான். அந்த அமைதியும் அறிவையும் வழங்கும் கல்வியை வழங்குபவர்கள் ஆசிரியர்கள்தான். நல்ல குடிமக்களை உருவாக்குவதில் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் பங்களிப்பு மகத்தானது.
மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் கலைத் திருவிழா நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
சிறப்பான பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்படும். மாணவர்களின் உடல், மனம் வலிமை பெற அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி அளிக்கப்படும்.
ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலாவுக்கு 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இன்று இந்த நிகழ்ச்சியல் பணி ஆணை பெறும் ஆசிரியர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று பேசினார்.