ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை விடியோ எடுத்தார் சசிகலா: டிடிவி தினகரன் தகவல்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது, அவரை சசிகலா விடியோ படம் எடுத்ததாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2017, 7:53 pm

DIN

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது, அவரை சசிகலா விடியோ படம் எடுத்ததாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் என்னிடம் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. அது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம்தான் இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா உடல் எடை குறைந்திருந்தார்.
எனவே, அவரை விடியோ படம் எடுக்க வேண்டும் என்று கூறிய போது, எனது சித்தியே (சசிகலா) அவரை விடியோ படம் பிடித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பார். அதுதான் அந்த விடியோ.
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற போது விடியோ படம் வெளியிடப்பட்டது. அதுபோன்று ஜெயலலிதாவின் விடியோ படத்தையும் வெளியிடலாம் எனக் கூறினார்கள். வீட்டில் பெண்கள் சாதாரணமாக அணியும் உடையில் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. அவர் 1989-ஆம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய போது அவரைப் பார்க்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வந்தார். அப்போது கூட உடலை முழுவதுமாக மூடிய நிலையிலேயே அவர் இருந்தார்.
அந்த விடியோ காட்சியை வெளியிட்டால் அது உண்மையா, பொய்யா என வாத விவாதங்கள் நடைபெறும். அதனால்தான் விசாரணை நடைபெறும் போது அதனை உரிய இடத்தில் அளிப்போம். அது சி.பி.ஐ., விசாரணையாக இருந்தாலும், சர்வதேச இன்டர்போல் விசாரணையாக இருந்தாலும் அங்கு கொடுப்போம். எங்களது மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயப்பட வேண்டும்.
விசாரணை ஆணையம் அமைத்தால் அதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டியது அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகம் இப்போது எழுப்பப்படுகிறது என்றால் என்ன காரணம் என்பதை யோசிக்க வேண்டும். விசராணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்வதற்குத்தான். இப்போது பணியில் இருக்கும் மூத்த நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்தால் நல்லது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.