சென்னை: அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், மத்திய மேற்கு வளிமண்டலத்தில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த இரு தினங்களைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. கன மழை என்று எடுத்துக் கொண்டால் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.
தென்மேற்குப் பருவ மழையை எடுத்துக் கொண்டால், ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 25 வரையிலான கால அளவில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 31 சதவீதம் அதிகம்.