சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ப.வள்ளல்பெருமான் (70) உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார்.
சிதம்பரம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ப.வள்ளல்பெருமானுக்கு மனைவி சரளாவும், மகன் அருண்குமாரும் உள்ளனர். எம்பிபிஎஸ் முடித்த ப.வள்ளல்பெருமான், கடந்த 1984, 1989, 1991 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2001 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் ஜனநாயக பேரவை சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். வள்ளல்பெருமானின் உடல் சிதம்பரம் கொண்டு வரப்பட்டு, வடக்கு பிரதான சாலை ஆசிர்வாதம் நகரில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் புதன்கிழமை (நவ.29) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வள்ளல்பெருமான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருநாவுக்கரசர் இரங்கல்: வள்ளல்பெருமான் மறைவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
, 'முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினரும், காங்கிரஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான வள்ளல்பெருமானின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மருத்துவம் படித்து காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினராக 3 முறை தேர்வு பெற்று, தொகுதியின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'.