அகவிலைப்படியை கணக்கிட மத்திய -மாநில அரசுகளிடம் போதிய அறிவியல்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16 -ஆவது மாநாடு, சென்னை மாதவரத்தில் தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் சுகுமால்சென் நினைவு ஜோதியை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பெற்றுக் கொண்டார், நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எம்.ஆர்.அப்பன் நினைவு ஜோதியை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் அவர் பேசும்போது, 'மத்திய அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை. அகவிலைப்படியைக் கணக்கிட மத்திய, மாநில அரசு நிர்வாகத்திடம் அறிவியல்பூர்வமான ஏற்பாடுகள் இல்லை' என்றார் டி.கே. ரங்கராஜன்.
இம்மாநாட்டில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அகில இந்திய தலைவர் கே.கே.என்.குட்டி, வங்கி ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர் சி.ஜெ.நந்தகுமார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










