உச்ச நீதிமன்றத்திடம் இருந்து தமிழக மக்கள் நீதியை தான் எதிர்பார்க்கின்றனர்; ஆறுதலை அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
'காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் நலன்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்' என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
இந்த அக்கறை உண்மை என்றால் அது வரவேற்கத்தக்கதுதான். அதிலும் தலைமை நீதிபதி அமர்வில் வேறு வழக்குக்காக ஆஜராகச் சென்ற தமிழக அரசின் வழக்குரைஞரை அழைத்து இவ்வாறு கூறியிருப்பது, காவிரிப் பிரச்னையில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உச்ச நீதிமன்றம் கவனித்து வருவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் மத்திய அரசே மதிக்கவில்லை என்பதுதான் தமிழகத்தில் போராட்டம் வெடிப்பதற்கான முக்கிய காரணம்.
வரும் 9-ஆம் தேதி, காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாள்களில் அமைக்க நீதிபதிகள் ஆணையிட வேண்டும். அதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எதிர்பார்ப்பது ஆறுதலை அல்ல, நீதியைதான் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









