காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முன்னின்று நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி என்.எல்.சி. நிறுவனம் முன்பாக 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளின் சார்பாக மாபெரும் போராட்டம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடத்தப்படுகிறது. என்.எல்.சி. முன்பாக மட்டுமன்றி, அங்கு பணியாற்றும் பல்வேறு உயர்அலுவலர்களின் வீடுகளின் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஐபிஎல் போட்டிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறம் தள்ளினால், மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






