/

காவிரி: தினமும் போராட்டங்கள் நடக்க வேண்டும்

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து தினமும் போராட்டங்கள் நடக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய கொந்தளிப்பு மத்திய அரசுக்குப் புரியும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும்

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:53 pm

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து தினமும் போராட்டங்கள் நடக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய கொந்தளிப்பு மத்திய அரசுக்குப் புரியும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து, மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகத்தின் சார்பில்தான் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு, அது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும் வாரியத்தை அமைக்கக் காலதாமதம் செய்கிறார்கள்.
கர்நாடகத் தேர்தலுக்காகத்தான் மத்திய அரசு இத்தனை வேலைகளைச் செய்கிறது. மே 15 வரை இழுப்பார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
காவிரி விவகாரம் ஏதோவொரு ஆற்றின் பிரச்னையல்ல. அது தமிழ்நாட்டின் உயிர்நாடியானப் பிரச்னை. 19 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகளுக்கு காவிரியில் இருந்துதான் குடிக்கத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. 40 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம். 5 கோடி மக்களின் தாகம் தீர்க்கிறது.
எனவே, காவிரி விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்த தமிழ்நாட்டில் தினமும் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்ந்து நடந்ததைப் போல, காவிரிக்காகவும் தொடர் போராட்டம் அவசியம். வரும் 11ஆம் தேதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் முழு வேலைநிறுத்தப் போராட்டத்திலும் அனைவரும் பங்கேற்க வேண்டும். பொதுமக்கள் சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதனால், ஒரு முறை ஐபிஎல் போட்டியை நிறுத்தினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இப்போது அதைவிடவும் 100 மடங்கு தீவிரமாக காவிரி விவகாரம் இருப்பதால், இங்கு ஐபிஎல் போட்டி நடக்கக் கூடாது. தமிழக அரசே நிறுத்த வேண்டும் என்றார் அன்புமணி.
பேட்டியின்போது, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்டச் செயலர்கள் சண்முகம், இமயவர்மன், மாநிலத் துணைத் தலைவர்கள் அரசாங்கம், சாந்தமூர்த்தி, பாடி செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.