சென்னை: வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது;
வடமேற்கு வங்க கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. கர்நாடகாவில் தற்பொழுது நிலவும் காற்றின் போக்கு மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பொழிய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் மேற்கு காற்று வீசும் பிரதேசங்களான நீலகிரி. கோவை மற்றும் தேனி ஆகிய பிரதேசங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழையிருக்கும்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் அந்தோமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் கடுமையான காற்று வீசும் என்பதால் , மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை இருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.