பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஆனால், இந்த நல்லுறவைச் சீர்குலைக்கும் வண்ணம் தனிநபர் ஒருவர், பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 139அடியாகக் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதை தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
பெரியாறு அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதற்கு கீழே உள்ள ஊர்களில் வாழும் மக்கள் பாதிப்புக்குள்ளாவர் என்பதில் சிறிதளவுகூட உண்மை கிடையாது. பெரியாறு அணைக்குக் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணை உள்ளது. இரு அணைகளுக்கும் இடையே சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தாக்கு உள்ளது. ஆற்றின் இருபுறமும் உள்ள அனைத்து ஊர்களும் 200 அடி முதல் 300 அடி உயரத்தில் அமைந்துள்ளன.
1976-ஆம் ஆண்டு இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகோ, அதற்கு முன்போ இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் அளவுக்கு வெள்ளம் வந்ததோ, 300 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் 100அடி அளவுக்குக்கூட வெள்ளம் வந்ததோ கிடையாது. மக்களுக்கும், ஊர்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகப் புள்ளி விவரங்களோ, வரலாறோ அறவே கிடையாது.
இயற்கையாக பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடுமே தவிர, மேட்டை நோக்கிப் பாயாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 142 அடியாக உயர்த்தப்பட்ட பெரியாறு நீர் மட்டத்தை எப்படியாவது குறைக்கவேண்டும் என்பதற்காக தனி நபர் பெயரால் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசால் அளிக்கப்படவில்லை. அதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது புரியாத ஒன்றாக உள்ளது. இந்த மனு இரு மாநில மக்களுக்கிடையே நிலவும் நல்லுறவை அடியோடு கெடுக்கக் கூடியதாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஏவி டைட்டன்ஸ், ஏசஸ் அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்

தம்மம்பட்டி அருகே 2 வீடுகளில் 20 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் கொள்ளை கத்தியால் வெட்டி பறித்துச் சென்ற கும்பல்: எஸ்.பி. விசாரணை

மேற்கு வங்கம்: சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வருடன் அமித் ஷா ஆலோசனை






