2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பட்டியலில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.
அந்த வகையில் உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான பட்டியலை, தனது டுவிட்டர் பக்க பதிவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில், ராஜஸ்தான் மாநிலம் கலு காவல் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் பே காவல் நிலையமும், மூன்றாவது இடத்தை மேற்கு வங்கத்தில் உள்ள பரக்கா காவல் நிலையமும் பெற்றுள்ளது.
இதில், புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடத்தையும், தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் குடரி ஐந்தாவது இடத்தையும், இமாச்சல பிரதேசம் மாநிலம் சோபல் ஆறாவது இடைத்தையும், ராஜஸ்தான் மாநிலம் லாகரி ஏழாவது இடத்தையும், உத்தரகண்ட் மாநிலம் முன்சரி ஒன்பாதவது இடத்தையும், கோவா மாநிலம் சர்ச்சோரம் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்திய அளவில் முதல் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.