

திருச்சி - வயலூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையின் போது பொறியியல் பட்டதாரிகளைக் காவல்துறையினரைத் தாக்கியதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உய்யக்கொண்டான் திருமலை அருகிலுள்ள செங்கதிர்ச்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26). எம்.டெக். பட்டதாரியான இவர், தனது நண்பர் பொறியியல் பட்டதாரி பாலச்சந்திரனை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தூர் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார்.
வயலூர் சாலையிலுள்ள காவல் சோதனைச் சாவடி பகுதியில் சென்ற போது அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால், மோட்டார் சைக்கிளை நிறுத்தி தலைக்கவசம் அணியாமல் வந்தது ஏன்? எனக் கேட்டு, ஓட்டுநர் உரிமத்தை கேட்டுள்ளார்.
வீட்டில் இருப்பதாகவும் அதை எடுத்து வருவதாகவும் கூறிச் சென்ற இருவர், மீண்டும் சோதனைச்சாவடிக்கு வந்தனர். அப்போது அபராதத் தொகை குறித்த பில் தரும் போது, அடித்தாள் இல்லாமல் அபராதம் விதிப்பது ஏன் என இருவரும் கேட்ட போது, காவல் உதவி ஆய்வாளர் கோபால் இருவரையும் அவர் தாக்கியுள்ளார்.
இதையடுத்து இருவரும் அங்கிருந்த ஓடியதால் மற்ற போலீஸாரும் அவர்களைத் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர்,. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, தீவிரவாதிகள் சிக்கிக் கொண்டார்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் இதை நம்பாமல், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை தாக்குவது ஏன்? எனக் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.