சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களைப் போக்க என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பல்வேறு நபர்களுக்கும் சம்மன்களை அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் வெள்ளியன்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இது தொடர்பான விடியோவானது சனிக்கிழமை அன்று வெளியாகி மிகுந்த பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு சம்மன் அனுபபி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.