/

நிலக்கரி இறக்குமதி: மின்வாரியத்துக்கு ரூ.1,560 கோடி இழப்பு: தணிக்கை அறிக்கையில் தகவல்

கடந்த 2013 -ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2016 -ஆம் ஆண்டு பிப்ரவரி வரை வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சுமார் ரூ.1,560 கோடி இழப்பு

News image
Updated On :9 ஜூலை 2018, 8:35 pm

DIN

கடந்த 2013 -ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2016 -ஆம் ஆண்டு பிப்ரவரி வரை வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சுமார் ரூ.1,560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ஆம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்ய கடந்த மூன்றரை ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் சுமார் 1,560 கோடி அளவுக்கு மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது மாநிலத்தின் தேவைக்காக, நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாளன்று உள்ள விலையில் அதனை வாங்காமல், டெண்டர் விடப்படும் நாளில் உள்ள விலையில் வாங்கியது, தரம் குறைந்த நிலக்கரியை வாங்கியது, இறக்குமதிக்கான விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் வாங்கியது போன்ற காரணங்களால் இந்த அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நிலக்கரியை கொள்முதல் செய்வதற்கான ஏலத்தை மறுசீரமைக்கவும், அதன்மூலம் குறைந்த விலையில் நிலக்கரியை வாங்க மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தும், அதை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடைப்பிடிக்காததும் நிதி இழப்புக்கு காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.