வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை போதுமான அளவுக்குப் பெய்யாததால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டு அணைகளும் நிரம்பவில்லை.
இந்நிலையில் நிகழாண்டில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நான்கு ஆண்டுகளுக்குப் பின், 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நிரம்பி தொடர்ந்து முழு கொள்ளளவிலேயே உள்ளது. இதேபோல் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே உள்ள நீரோடைகளில் நீர் தேங்கியுள்ளது.
வால்பாறை நகர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள அக்காமலை தடுப்பணை கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வறண்டு காணப்பட்டது. தொடர் மழையால் ஒரு மாத காலமாகத் தடுப்பணை நிரம்பி வழிந்தோடுகிறது. சோலையாறு அணையில் இருந்து தொடர்ந்து பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படும் நீர் மூலம் சமவெளிப் பகுதி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








