இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், அரசு சிறப்பு வழக்குரைஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பிலும் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.