சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களாக தென்மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகிறது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன் வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகு 1-இன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மேட்டூா் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் அளவுக்கான மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரம் குறையும்போதோ, மின்தேவை அதிகரிக்கும்போதோ நிறுத்தி வைக்கப்பட்ட அனல்மின் நிலைய மின்உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.