சென்னை: மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தினை உருவாக்கி அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முன்னரே உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வேலூரை சேர்ந்த பிரியா செல்வி, திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலையை சேர்ந்த கணேசன், சென்னை முகப்பேரை சேர்ந்த பாலாஜி சிங், நாகப்பட்டினம் மாவட்டம் கயத்தூரை சேர்ந்த ஆசைமணி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த ராஜமோகன் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது நியமனத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், பொறுப்பேற்றுள்ள இவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டு காலம் அல்லது 65 வயது நிறைவு பெறும் வரை, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை இந்த பதவியில் இருப்பார்கள் என உணவுத்துறை செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.