தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருவள்ளூர் பேருந்து நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு 

திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த சில்லறை வியாபாரிகளால் ஏற்படும் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

News image

பேருந்து நிலைய நடைபாதையில் பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள்.

Updated On :14 மே 2018, 10:15 pm

திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்த சில்லறை வியாபாரிகளால் ஏற்படும் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
திருவள்ளூர் நகரின் மத்தியில் நகராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை மற்றும் சித்தூர், ரேணிகுண்டா, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 
அதோடு, மாவட்டத் தலைநகரான திருவள்ளூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 
பயணிகள் அவதி: ஏற்கெனவே இப்பேருந்து நிலையத்தில் அதிக பேருந்துகள் நிற்கும் அளவுக்கு இடவசதி கிடையாது. ஒரே சமயத்தில் 20 பேருந்துகள் நிற்கும் அளவுக்கே இடவசதி உள்ளது. அதிலும், காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். 
அப்போது, பேருந்துகள் வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், இங்கு வரும் பயணிகளுக்கு குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் உள்ளேயே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு பயணிகள் அவதிப்படுகின்றனர். 

நடைபாதையை ஆக்கிரமித்து...: 

இதுபோன்ற நெருக்கடியுடன் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் நடைபாதையை சில்லறை வியாபாரிகள் ஆக்கிரமித்து பழக்கடை உள்பட பல்வேறு கடைகளையும் பரப்பியுள்ளனர். ஏற்கெனவே நகராட்சி பேருந்து நிலையத்தில் 15 கடைகள் உள்ளன. 
இதில், வியாபாரிகள் ஒவ்வொரு கடைக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 45 
ஆயிரம் வரையில் இடவசதிக்கேற்ப ஏலம் எடுத்துள்ளனர். இதற்காக நகராட்சிக்கு முன்பணமாக ஒரு ஆண்டு வாடகைப் பணமும், 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து செலுத்தியுள்ளனர். தற்போது, இனிப்பு, பழக்கடைகள், ஓட்டல் உள்பட பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர். இக்கடைகளை ஏலம் விடும் போது பேருந்து நிலையக் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், திருட்டைத் தடுக்க சி.சி.டி.வி. கேமரா வைக்கவும் உறுதியளித்தனர். அத்துடன், எக்காரணம் கொண்டும் சில்லறை விலைக்கடைகளை உள்ளே அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர். 
தற்போது, பேருந்து நடைமேடையில் பாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக சில்லறை வியாபாரிகள் பல்வேறு கடைகளையும் வைத்துள்ளதால், ஏலம் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
 

நகராட்சிக்கு வருவாய் பாதிப்பு: இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் கடையை ஏலம் எடுத்த ஒருவர் கூறியதாவது: பேருந்து நிலையத்தில் நடைபாதை யை ஆக்கிரமித்து சில்லறை வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இதனால், ஏலம் எடுத்த கடைகளில் வியாபாரம் குறைவாக இருப்பதால் 4 கடைகளை மூடிவிட்டு, நகராட்சி ஆணையரிடம் திறவுகோல்களையும் ஒப்படைத்துள்ளனர். இக்கடைகள் சீல் வைக்கப்பட்டு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அக்கடைகளின் முன்புற பகுதியை ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர். இந்த சில்லறைக் கடைகளை தனிநபர் உதவியுடன் வைத்துள்ளனர். இதற்காக சில்லறை வியாபாரிகளிடம் தனி நபர்கள் வாடகையும் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து, ஏற்கெனவே ஆணையாளரிடம் ஏலம் எடுத்த வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலை நீடித்தால் இங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்படும் நிலையேற்பட்டு, நகராட்சிக்கு கிடைக்கும் வருவாயும் பாதிக்கும் என வும் அவர் தெரிவித்தார். 
 

தனியாரிடம் ஒப்படைக்க ...: இதுகுறித்து, நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன் கூறுகையில் "ஏலம் எடுத்தவர்களே இதுபோன்ற சில்லறைக் கடைகள் வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பேருந்து நிலையத்தின் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்பந்தம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.