தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22-ஆம் தேதி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை கிளப்பியது. திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இந்நிலையில், ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக நேற்று அறிவித்தார். அதன்படி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு அவர் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.
அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 48 பேரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ரஜினி சென்றதால் மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு கருதி ஏராளமான போலீஸாரும் காவலுக்கு குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், மருத்துவமனைக்கு உள்ளே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இதுவரை ட்விட்டர் களத்திலும், ரசிகர் மன்ற கூட்டத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் அரசியல் பேசி வந்த ரஜினி தற்போது முதன்முறையாக முக்கிய விவகாரத்தில் மக்களை நேரில் சந்தித்துள்ளார்.