சென்னை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களில் 74 சதவீத வருகைப் பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத கட்டண தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மற்றும் ஏழை மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் செவ்வாயன்று முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வேன்களில் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். ஆனால் போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது போலீசாரை எதிர்த்து பேசிய ஒரு சில மாணவ-மாணவிகள் தாக்கப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தாக்கியவாறு இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த தடியடி சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.