கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் 2018 -ஆம் ஆண்டுக்கான "கண்ணதாசன் விருது' , திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் மாலன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள கண்ணதாசன் கழகம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியன சார்பில், கண்ணதாசன் பெயரில் அவரது பிறந்த நாளான ஜூன் 24 -ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான "கண்ணதாசன் விருது' பிரபல எழுத்தாளர் மாலன், திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 24 -ஆம் தேதி நடைபெறுகிறது.
விருதுடன் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதினை படைப்பு இலக்கியத் துறையில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், சிற்பி பாலசுப்பிரமணியம், வண்ணதாசன், ஜெயமோகன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், அமுதோன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
அதே போல், கலைத் துறையில் பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, டி.ஆர்.எம்.சாவித்திரி, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாசலம், முத்துலிங்கம், பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன், கவிஞர் கண்ணதாசனின் உதவியாளர் இராம.முத்தையா ஆகியோர் பெற்றுள்ளனர் என கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.