

85 வயதாகும் குடும்பத் தலைவர் உட்பட மூன்று தலைமுறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வீரம்பாக்கம் கிராமத்தில் 2017ம் ஆண்டு கொத்தடிமைகளாக இருந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவு செய்யும் அடிப்படை உரிமையே இவர்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், ஜனநாயகக் கடமையை எப்படி நிறைவேற்றுவது?
இந்த குடும்பத்தில் 85 வயதாகும் குடும்பத் தலைவர் கன்னியப்பன் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி இறந்த பிறகு ஒரே மகள் கருப்பாயியுடன் வசித்து வருகிறேன். அவருக்கு 3 மகன்கள். அவர்களில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்கிறார்.
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இந்த குடும்பத்தினர் இதுவரை ஒரு தேர்தலில் கூட வாக்களித்தது இல்லையாம். இவர்கள் 7 பேரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருக்கும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கந்தசாமி, தேர்தல் அலுவலர்களுடன் கன்னியப்பனின் வீட்டுக்கு வந்தார்.
வாக்குப் பதிவு இயந்திரங்களின் மாதிரியோடு கன்னியப்பன் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை அவரது குடும்பத்தினருக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.