ரவுடிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது.
பல மாநிலங்களில் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பச் சொல்லி பிற மதத்தினரை துன்புறுத்தும் கும்பல்களைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது, இந்த ஆன்மிக ரவுடித்தனம் தமிழகத்திலும் பரவியிருக்கிறது. ஆனால் வேறு ரூபத்தில்.
திருப்பூர் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட, ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1000 தர வேண்டும் என்று கடைதோறும் கட்டாய நன்கொடை வசூல் நடைபெற்றது.
அப்போது, ஒரு கடைக்காரரான சிவா கட்டாய வசூலுக்கு இணங்காமல், ரூ.300 மட்டுமே தர முடியும் என்று கூறினார். சிவா ஆயிரம் ரூபாய் கொடுக்க மறுத்ததால், நன்கொடை வசூலிக்க வந்த விஎச்பியினர் அவரை கடுமையாக தாக்கினர்.
அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதில், சிவாவை ஒரு கும்பல் தாக்குகிறது. அருகே இருந்த பெண் அவர்களை தடுப்பதும் அதில் பதிவாகியிருந்தது.
திருப்பூரில் சிட்கோ அருகே ஒவ்வொரு ஆண்டும் விஎச்பியினர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த சிலை வைப்பதற்காக விஎச்பியினர் இவ்வாறு கடைகளில் கட்டாய வசூல் செய்திருப்பது இந்த விடியோ மூலம் ஊடகங்களில் வைரலாகியுள்ளது. விடியோவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, கட்டாய வசூல் செய்து, கடைக்காரரை அடித்து உதைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக விஎச்பி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.