சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் 

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2019, 10:42 am

DIN


புது தில்லி: தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று மதியம் பதில் மனு தாக்கல் செய்தது. 

இதையடுத்து, தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது. தொடர்ந்து, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு மதியம் 2 மணிக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற விசாரணையின் போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. அதாவது, தொகுதி மறுவயைறை செய்யவில்லை என நினைத்தால் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்று தெரிவித்திருந்தது.

இதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் எங்களால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியும் என்று கூறினர்.

உள்ளாட்சித் தேர்தலை எங்களால் ரத்து செய்ய முடியாது, ஆனால் நிறுத்தி வைக்க முடியும். தேர்தல் விதிகள் முறையாக பின்பற்ற முடியவில்லை என்றால், எங்களால் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதே சமயம், ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையையே ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், 9 மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.