பருவம் தவறிய மழை மற்றும் தொடா்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை வினியோகித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன், பொதுத் துறையைச் சோ்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், ஜனவரியில் வெங்காயம் இறக்குமதியாகும் என, எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200-ஆக ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்பு 5 கிலோ வெங்காயம் வரை வாங்கி வந்த தனது வாடிக்கையாளர்கள் தற்போது ஒரு கிலோ மட்டுமே வாங்குவதாக வெங்காய விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
வெங்காய விலை உயர்வு குறித்து ஜெயசுபா என்பவர் கூறுகையில், எங்கள் வீட்டுக்கு வெங்காயம் வாங்க ஒரு வாரத்துக்கு மட்டும் ரூ.400 செலவிட வேண்டியுள்ளது என்றார்.