கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து, சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அப்போது, அதிமுக
அரசு தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மத்திய அரசிடமிருந்து புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடுதல் நிவாரணத் தொகையை பெற வேண்டும் என திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலின் போது 471 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான இழப்பீடு நிவாரணத் தொகையை ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும். சாலை மார்க்கமாக சென்றால் அனைத்து பகுதிகளையும் பார்க்க முடியாது என்பதால் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன் என்றார்.