
சென்னை: சுவைமிக்க செட்டிநாடு சிக்கன் இருக்கும் போது சிக்கன் - 65 ஐ எதற்கு சாப்பிட வேண்டும்? என்று சென்னையில் நடைபெற்ற மருத்துவமனை விழா ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு சென்னை வந்துள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை சென்னை தரமணியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சையளிக்கும் "ப்ரோட்டான் தெரபி சென்டரை" அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிகிச்சைப் பிரிவைத் துவங்கி வைத்த பிறகு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:-
மருத்துவ துறையில் தனியாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. 2020-ல் இந்தியா வளமான நாடாக மாறி விடும், ஆனால் நலமான நாடாக இருக்குமா என்றால் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக நம்முடைய கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டும். அவர்கள் நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது.
இங்குள்ள செட்டிநாடு சிக்கனுக்கு இணையான அசைவ உணவு உலகில் வேறு எங்குமே இல்லை. இது இருக்கும் போது சிக்கன் - 65 போன்றவற்றை எதற்கு சாப்பிட வேண்டும்? நமது மோர்க்குழம்பின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை. இடியாப்பம், ஆப்பம் போன்ற ருசியான உணவு வகைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதுபோல இட்லி, சாம்பார், வடை, இடியாப்பம் போன்றவையும் மிகச்சிறந்த உணவுகள்
அதேசமயம் நமக்கு பொதுவாக உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.