சென்னை: பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான அந்நியச்செலாவணி மோசடி வழக்கில், காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
ஜெஜெ டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்னணுக்கருவிகள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை அந்நியச்செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் காணொலிக்காட்சி மூலம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் . சசிகலா மீதான வழக்குகளை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காணொலிக்காட்சி மூலம் திங்களன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு சசிகலா ஆஜரானார். மொத்தம் 4 வழக்குகளில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தெரிகிறது.
சசிகலாவிடம் பிப்ரவரி 12-ம் தேதி அமலாக்கத்துறை குறுக்கு விசாரணை செய்யும் என்று தெரிகிறது.