சென்னை: மருத்துவர் தின - பட்டயக் கணக்காளர் தினம் கொண்டாப்படுவதை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மருத்துவர் தின - பட்டயக் கணக்காளர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதற்கினங்க மக்களின் ஆரோக்கியத்திற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபடுபவர்கள் மருத்துவர்கள். தங்கள் உயிரை துச்சமென மதித்து தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தனி சட்டமே இயற்றினார். ஆகவே, புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க முதலமைச்சருமாக இருந்த திரு பி.சி. ராய் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் இந்த தேசிய மருத்துவர் தினத்தில் “மருத்துவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி, மக்களுக்கு பணியாற்றிடும் சூழல் நாடு முழுவதும் உருவாக்கப்பட வேண்டும்” என்று சூளுரைப்போம்.
மருத்துவர்கள் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு என்றால் பட்டய கணக்காளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும்- நிதிக் கட்டமைப்புக்கும் மிக உறுதியான பாதுகாவலர்கள் என்பதில் சந்தேகமில்லை. நம்பகத்தன்மைமிக்கவர்களாகத் திகழும் பட்டயக் கணக்காளர்கள், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்ற அரிய நற்பண்புகளை சமுதாயத்தில் பரப்பும் தூதுவர்களாக திகழ்பவர்கள். நாட்டின் நிதி கட்டமைப்பின் அஸ்திவாரங்களாக விளங்கும் பட்டயக் கணக்காளர்கள் - அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் என்றும் ஆக்கபூர்வமான பாலமாக திகழ வேண்டும் இந்த தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினத்தில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.