சென்னை: சென்னை நந்தனம் அருகே மூன்று பேர் ஒரே பைக்கில் வந்த போது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த படுபயங்கர விபத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் பேருந்துக்கும், இருசக்கர வாகனத்துக்கும் இடையே இருந்த குறுகிய இடைவெளியில் இரண்டு பெண்களை பின்னால் அமரவைத்து இளைஞர் ஓட்டி வந்த வாகனம் வேகமாக கடக்க முயலும் போது நிலைதடுமாறி விழுந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பது பதிவாகியுள்ளது.
மூன்று பேர் ஒரே பைக்கில் சென்ற போது நிகழ்ந்த இந்த விபத்தில், பவானி, நாகலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தது சென்னையின் முக்கியப் பகுதி என்பதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.