

சென்னையில் மொத்தம் உள்ள 13 ஏரிகளில் கொரட்டூர் உள்ளிட்ட 3 ஏரிகளில் தண்ணீர் இருந்தாலும் அதனை பயன்படுத்தக் கூடாது என்று மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல், கழிவு நீர் கலப்பது போன்ற காரணங்களால் கொரட்டூர், அயப்பாக்கம் மற்றும் திருநீர்மலை ஏரிகளில் இருக்கும் தண்ணீர் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மூன்று ஏரிகளிலும், பயன்படுத்தத் தக்க தண்ணீரில் இருக்கும் கழிவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், தற்போது சொற்ப தண்ணீரே இந்த ஏரிகளில் இருந்தாலும் கூட அதையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரட்டூர் மற்றும் அயப்பாக்கம் ஏரிகளில் அருகில் இருக்கும் அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் இருக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் இந்த ஏரிகளில் கலக்கப்படுவதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.
திருநீர்மலை ஏரியில் பல இடங்களில் இருந்தும் கழிவுகள் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது. இது பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ எந்த இரும்புக் கரமும் நீளாததே, இன்று கடும் தாகத்தோடு மாசடைந்த நீரை வேடிக்கைப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.