

திருச்சி: குடிநீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு என தண்ணீர் பஞ்சத்தை எந்த வார்த்தையில் வர்ணித்தாலும், மக்களின் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைக்க வார்த்தைகள் இல்லை.
எந்த ஒரு மோசமான விஷயத்திலும், ஏதோ ஒரு சமூகத்துக்கு அல்லது ஒரு தொழிலில் லாபம் இருக்கும் என்பது உண்மைதான்.
அந்த வகையில், கடும் குடிநீர் பற்றாக்குறையிலும், ஒரே ஒரு தொழிலுக்கு மட்டும் அமோக வரவேற்பு உள்ளது. குடிநீர் பற்றாக்குறையால் எங்குமே காணக் கிடைக்காத குடிநீருக்காக, மக்கள் கைகளில் காலி பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக் கொண்டு நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
ஆம், அந்த பிளாஸ்டிக் குடங்களை உற்பத்தி செய்வோரும், விற்பனை செய்வோரும்தான் தற்போதைய தனவான்கள்.
கிடைக்காத தண்ணீரை பிடித்து வைக்க தினந்தோறும் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பிளாஸ்டிக் குடங்களின் உற்பத்தியை ஆலைகள் அதிகரித்துள்ளன.
இது குறித்து சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர் கார்த்திக் கூறுகையில், ஒவ்வொரு நாளும் 700 பிளாஸ்டிக் குடங்களை உற்பத்தி செய்வது வழக்கம். ஆனால் தற்போது தேவைக்கேற்ப 12 மற்றும் 18 லிட்டர் கொள்ளவு கொண்ட குடங்களை உற்பத்தி செய்வதை அதிரித்துள்ளோம். அதனால், ஒவ்வொரு நாளும் 1000 முதல் 1200 பிளாஸ்டிக் குடங்களை உற்பத்தி செய்கிறோம். பொதுவாகவே இந்த குடங்களை பெரம்பலூர், ஆத்தூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கிராமம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில்தான் விற்பனைக்கு அனுப்புகிறோம் என்றார்.
ஒட்டுமொத்த விற்பனையாளர் ஜவகர் கூறுகையில், திருச்சியில் ஒரு சில உற்பத்தியாளர்களே இருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் தேவை அதிகரிக்கும் போது கேவையில் இருந்துதான் நாங்கள் குடங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். பிளாஸ்டிக் குடங்கள் விலையும் குறைவு, எடையும் குறைவாக இருக்கிறது என்பதாலேயே அதிகம் வாங்குகிறார்கள். 12 லிட்டர் குடத்தை ரூ.50க்கும், 18 லிட்டர் குடத்தை ரூ.60க்கும் விற்கிறோம். இது மிகவும் விலைக் குறைவு. ஆனால் இதே கொள்ளளவு கொண்ட எவர்சில்வர் குடங்கள் ரூ.370க்குத்தான் கிடைக்கும். எனவே, உடனடித் தேவைக்கு மக்கள் பிளாஸ்டிக் குடங்களையே நாடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் திருச்சியில் தற்போது தண்ணீர் பஞ்சம் என்பது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் நாள்தோறும் கிடைக்கும் தண்ணீரை அதிகமாக சேமிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் பிளாஸ்டிக் பாரெல்களை வாங்கி அதில் நீரைப் பிடிக்கிறார்கள். பேரல்கள் ரூ.700க்கு விற்பனையாகிறது. அதில் 250 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம்.
முன்பெல்லாம் ஹோட்டல் நிர்வாகத்தினர் தான் பெரிய பெரிய பேரல்களை வாங்குவார்கள். தற்போது நடுத்தர குடும்பத்தினர் கூட பேரல்களை வாங்கி தண்ணீர் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தண்ணீர் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் கிடைக்கும் போது பெற்று சேமித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
இதே ஆர்வத்தை மழை நீரிலும் காட்டினால் நிச்சயம் அடுத்த ஆண்டு பிளாஸ்டிக் குடங்களை எடுத்துக் கொண்டு தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்படாது என்று நம்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.