சென்னை: நோட்டாவில் காணாமல் போயிருக்கும் பாஜகவைத் தேட எங்கள் 'டார்ச் லைட்' சின்னம் உதவும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள ஆனால் அங்கீகாரம் பெறாத 39 கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் ஞாயிறன்று அறிவிப்பு வெளியிட்டது.
அதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நோட்டாவில் காணாமல் போயிருக்கும் பாஜகவைத் தேட எங்கள் 'டார்ச் லைட்' சின்னம் உதவும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை கமல் ஞாயிறன்று சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது.
பொருத்தமான ஒரு சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு முதலில் நன்றி.
தமிழ்நாட்டில் நோட்டாவில் காணாமல் போயிருக்கும் பாஜகவைத் தேட எங்கள் 'டார்ச் லைட்' சின்னம் உதவும்.
மக்களவைத் தேர்தலில் நல்லவர்கள் எங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறி இருந்தோம். அப்படியானால் முக்கால்வாசி பேர் வர இயலாதல்லவா? எனவே இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி மக்களுடன்தான். மக்களுக்கான ஆட்சி மலரும் நாள் விரைவில் வரும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1137 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. பின்னர் பட்டியலை அறிவிப்போம்.
அதேபோல் தேர்தல் அறிக்கைஉருவாக்கும் பனி நடைபெற்று வருகிறது. சாத்தியமான அம்சங்களை ஆராய்ந்து சேர்த்து வருகிறோம். விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியம் இல்லை. அது வேறு சில தவறுகளுக்கு வழிவகுக்கும். படிப்படியாகத்தான் அமல் செய்ய வேண்டும்.
21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த அறிவித்துளார். அவரிடம் எங்களுக்கு ஆதரவைத் தாருங்கள் என்று கேட்பது இரு தரப்புக்கும் சங்கடம். அவராகத் தருவார் என்று நம்புகிறோம். அளித்தால் மகிழ்ச்சி.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.