
கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசுவுக்கு 4 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவல் அளித்து, கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் திருநாவுக்கரசுவை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் கோவை மாநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் திருநாவுக்கரசுவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் வெளியே பயிற்சி வழக்கறிஞர்கள், மகளை சங்கங்களை சேர்ந்தவர்கள். அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் திரண்டிருப்பதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே, காணொளி காட்சி மூலம் அவரை ஆஜர்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை ஏற்று, காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவ்வாறே ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் நீதிபதி சுமார் 40 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.
இறுதியில் திருநாவுக்கரசுவுவை 4 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.