பல வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 4 முகவர்கள் உள்ளனர். அவர்கள் வாக்கு எங்கே சென்றது?. ஏறத்தாழ 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட விழவில்லை எனத் தகவல் வந்துள்ளது.
முகவர்கள் வாக்கு கூட பதிவாகாமல் இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 10 பேர் கட்சியை விட்டு செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
அதிமுகவில் உள்ள ஸிலீப்பர் செல் யார் என்பது குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரியும். திமுகவிற்கு சென்று செந்தில் பாலாஜி வெற்றிபெற்றது அவருடைய புத்திசாலித்தனமாக இருக்கலாம். தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். இவ்வாறு அவர் கூறினார்.