சென்னை: தி.மு.கழகத்தின் சார்பில் பொய்ச் செய்திகளை வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பும் விஷமிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரோ அல்லது தலைமைக் கழகமோ எவ்வித அறிவிப்பும் - ஆர்ப்பாட்டமும் - போராட்டமும் அறிவிக்காத நிலையில், தி.மு.கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் - அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சமூகவலைதளங்களில் ஒன்றான "வாட்ஸ்அப்"-பில் தன்னிச்சையாக வேண்டுமென்றே பொய்ச் செய்தி ஒன்றினை உலாவிட்டு வருகின்றனர் சில விஷமிகள்.
தி.மு.கழகத்தின் வளர்ச்சியையும் - எழுச்சியையும் கண்டு பொறாமையின் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழக மக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப்-பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் பொய்ச்செய்தினை வெளியிட்டவர்மீது நடவடிக்கை எடுத்திட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு பொய்ச் செய்தியினை வதந்தியாக பரப்புவர்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தி.மு.கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.