ஆவின் பால் விலை உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அரசு அறிவிப்பின்படி பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 28-இல் இருந்து ரூ. 32-ஆக, அதாவது லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35-இல் இருந்து ரூ. 41-ஆக அதாவது லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்தது.
இவ்வாறு கொள்முதல் விலை உயர்த்தப் பட்டதால், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
உயர்த்தப்பட்ட பால் விலை எவ்வளவு?: இதன் காரணமாக இனி உயர்த்தப்பட்ட புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும். அதன்படி, இதுவரை ரூ. 22.50-க்கு விற்பனை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற "ப்ரீமியம்' பால் பாக்கெட் இனி ரூ. 25.50-க்கு விற்பனை செய்யப்படும். (மாதச் சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 24.50).
இதுவரை ரூ. 20.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை நிற "கிரீன் மேஜிக்' பால் பாக்கெட் இனி ரூ. 23.50-க்கு விற்கப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 22.50).
இதுவரை ரூ. 18-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நீல நிற "நைஸ்' பால் பாக்கெட் இனி ரூ. 21.00-க்கு விற்பனை செய்யப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 20.00). இதுவரை ரூ. 17-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த "டயட்' பால் பாக்கெட் இனி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 19.50).
வெண்ணெய், நெய் விலையும் உயர்கிறது: பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் போன்ற பொருள்களின் விலையும் உயர்த்தப்படும் என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
டீ, காபி விலை உயர்வு?: ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து டீ, காபி விலைகளை உயர்த்த டீக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.