பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் நெல்லை கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பாஜக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.