சென்னை: அவசியமில்லாமல்,தேவையில்லாமல் தி.மு.க.-வை கமல் விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்றுஅவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் அவர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறினேன்.
அந்தக் கருத்தை நான் கூறும்போது, தி.மு.க.-வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை. கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.